25 டிசம்பர், 2010

சைவமும் தமிழும் வளர்ப்போம் வாரீர்!

ஊரெல்லாம் வீடுகள் இருந்தது
வீடெல்லாம் மனிதர்கள் இருந்தார்கள்
தேர்முட்டியில் ஆட்கள் இருந்தார்கள்
திருவிழாக்களில் கூட்டம் இருந்தது.
நாடுமாற நாங்கள் திசைமாறி வந்தோம்.
ஊரெல்லாம் வீடுகள் இருக்கிறது
வீடுகள்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது
சிலவீடுகள் கூரையில்லாது தவிக்கிறது
சிலவீடுகள் சுவருடைந்து தவிக்கிறது
சிலவீட்டில் காட்டாக்காலி வாழ்கிறது
வேலிகள் இல்லாது வளவுகள் தவிக்கிறது
துகில் போனபின் அது அம்மணமாய் துடிக்கிறது
வாடகை கொடுத்துக் குடியிருந்தார் அப்பொழுது
வருமானம் வேண்டிக் குடியிருக்கிறார் இப்பொழுது
காலம் மாறி இருக்கிறது.
கனடாவுக்கு கதைத்து முடிவெடுக்கிறார்.
ஆண்டவனைத் துாக்குவதற்கே
ஆள்பிடிக்கப் அலைகிறார்கள்.
அகப்பட்டால் அவர் சகடையில் ஊர்வலம்
அன்றேல் ஐயர் தனியச் சுமக்கும் கேவலம்
கொழும்பு வாசிகள் ஆனதமிழரே
கொஞ்சமும் வெட்கப்படாதீர்
நான் உங்களைச் சொல்லவில்லை
எனக்கு அந்தத் தார்மீக பலமும் இல்லை.
நாங்கள் சீமையிலே கோயில்கட்டி
சிங்காரித்து அவரைத்துாக்கி
சங்கங்கள் அமைத்துச்
சைவமும் தமிழும் வளர்ப்போம் வாரீர்!

எங்கள் நீதி

வெள்ளி நட்சத்திரங்கள் தவறிவிழுந்து பூமியெங்கும் மினுங்குகின்ற கடும் குளிர்காலம்... ஆவிவிடும் துவாரங்களை மனிதனில் கண்டு பிடித்து வெப்பத்தைக் குளிர் அட்டையாக உறிஞ்சும் அவஸ்தை. அட்டையான குளிரை எதிர்த்துப் பனியுலகில் மனிதவாழ்வைக் காப்பாற்ற அவன் கட்டிய வீடுகள் அவனுக்காகப் போராடும்.

நந்தினி தன்னை நன்கு அலங்கரித்து இருந்தாள். நந்தினியின் அப்பாவும், அம்மாவும் நன்றாகத் தங்களை அலங்கரித்து இருந்தார்கள். அவர்கள் மருமகனை முதன் முதலாகப் பார்க்கப் போகும் சந்தோசத்தில் இருப்புக் கொள்ளாது அலைந்தார்கள். தங்கள் மகனை நினைத்தபோது அவர்களுக்கு ஒருமுறை நெஞ்சில் நெருப்பை கொட்டியது போன்று இருந்தது. அந்த நினைவுகள் கொடுமையானவை... வன்மையானவை... இன்றும் நினைவைவிட்டு அகலாது நிலைத்திருப்பவை...

நீலனை எண்ணும்போது நந்தினிக்கு ஒருவித போதை சட்டென மூளையில் பாய்கிறது. அவன் கண்கள் பார்வையில் மது ஊட்டி எப்போதும் இடைவிடாது கள்வெறி கொள்ள வைக்கிறது. முதல்நாள் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் கண்டபோதே அவளால் அந்தப் பார்வையைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதற்கு முன்பு ஆயிரம் ஆண்களை, அவர்களது கண்களை அவள் பார்த்து இருக்கிறாள். பல இடங்களில் வேலையும் செய்து இருக்கிறாள். யார்மீதும் அப்படியொரு கவர்ச்சியும், காதலும் அவளுக்கு உண்டானது இல்லை. அன்று அவனைப் பல்கலைக்கழகத்தில் கண்டபோது... கைகுலுக்கியபோது... கதைத்தபோது... மனது எங்கோ ஆகாயத்தில் பறந்தது. இமைகள் நிலையின்றி வெட்டிய வண்ணம் இருந்தன. கன்னத்தால் சூடுபறக்கும் ஒருவித வெட்கத்தை முதல் முறை உணர முடிந்தது. கால்கள் தரையில் இருப்பதை நினைவுகள் மறுத்து நின்றன. அவனைப் பார்க்கக்கூடாது என்று திருப்பிய பார்வையைப் பலகணங்கள் நிலையாக வைத்திருக்க முடியாது; தோல்வி எப்போதும் தாக்கியது. காதலா... கவர்ச்சியா... அல்லது இரசாயனங்களின் ஒற்றுமையா... இருவரையும் ஏதோ ஒன்று இணைத்தது. சேர்ந்து கதைக்க... சப்பாட்டிடைவேளைகளைக் கலகலப்பாகக் கழிக்க... அப்போது ஆளையாள் இரசிக்க...

ஒன்று மாத்திரம் அவனிடத்தில் அவளுக்குப் பிடிப்பதில்லை. அநேகரின் புரிதல் அப்படிக் கோணலாய் இருப்பது அவள் மனதை அடிக்கடி துன்புறுத்தும். ஒருமுறை அவன் அதைப்பற்றிக் கதைக்கும்போது அவள் வேதனையோடு மௌனமாக இருந்தாள். வாய்திறக்க வேண்டும் போல இருந்தது. வரும் சொற்கள் நிட்சயம் தங்கள் உறவைச் சுட்டுவிடும் என்பதை அறிந்து அடங்கிப் போனாள். பின்பு வீட்டிற்கு வந்து 'அண்ணா உன்னை அவமானப்படுத்தியதற்காய் மன்னித்துவிடு' என அவன் படத்திற்கு முன்னால் நின்று அழுதாள்.

அவளுக்கு இன்றும் அண்ணாவின் நினைவாகவே இருந்தது. 'இன்று அவன் இருந்திருந்தால்... அண்ணா, அண்ணி, அவர்கள் பிள்ளைகளென எவ்வளவு சந்தோசமாய் இருந்திருக்கும்? கொள்ளி வைப்பதற்குகூடப் பிள்ளை இல்லை என்பதில் அப்பா எவ்வளவு ஒடிந்து போய் இருந்தார். நடைப்பிணங்களாக இருந்த அம்மாவும் அப்பாவும் இப்போது சற்று அதை மறந்து இருக்கிறார்கள். இப்படி ஒரு நிகழ்வு நடக்கும்போது அண்ணன் இருந்து அதிகாரம் பண்ணியிருக்க வேண்டும். எல்லாம் அநியாயமாகப் பறிக்கப்பட்டு விட்டது ' இந்த நினைவு இதயத்தில் குண்டூசிகள் ஏறியதான வேதனை தந்தது.

'அண்ணன் ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது அப்பா அவனோடு கதைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் 'பல எலி சேர்ந்தாப் புத்தெடுக்காது தம்பி' எனத் தனது பழமொழி அறிவை அவனிடம் காட்டினார். அதற்கு அவன் 'ஆர்குத்தினாலும் அரிசியானால் சரியப்பா' என்றான். அதற்கு மேல் அப்பாவிடம் இருந்து பழமொழி வரவில்லை. 'அது எங்கயடா நீங்கள் சேர்ந்து குத்தப் போறியள்?' என்றார் சலிப்போடு. 'அது நடக்கும் அப்பா. நாங்கள் எல்லாரும் ஒரே நோக்கத்திற்குத்தானே போயிருக்கிறம். நிட்சயமாக எல்லாத் தலைவர்களும் அதைப் புரிஞ்சு கொண்டு சேருவாங்கள் அப்பா. சகோதரங்களுக்க அடிபட்டு சாகமாட்டம் எண்டு எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு அப்பா' என அதீத நம்பிக்கையோடு கூறிவிட்டுச் சென்றான். அந்த அண்ணனை அப்பா பத்துநாள் கழித்துப் பைத்தியகாறன் போல் தேடித் திரிந்தார். 'எங்க எரிச்சியள்? தயவு செய்து இடத்தைக் காட்டுங்கோ' என்று கேட்டவரைத் துாசனத்தால் பேசி, சேட்டைக் கிழித்து 'இனியும் நின்றால் சுட்டுத் தள்ளுவோம் ' என வெருட்டி அனுப்பி வைத்து இருந்தார்கள்'.

'மருத்துவராய் இருந்த அப்பா அன்றோடு நடைப்பிணமானார். மருத்துவரான அப்பாவைக் குணப்படுத்த பெரியப்பா பல மருத்துவர்களைத் தேடி அலைந்தார். அவரது அன்பில் அப்பா பையித்தியம் ஆகாத பாக்கியம் கிட்டியது. அதன் பின்புதான் இனி இந்த நாடே எங்களுக்கு வேண்டாம் எனப்புறப்பட்டு இங்கு வந்து குடியேற வேண்டியதாயிற்று ' என்கின்ற பழைய கதையை மீண்டும் எண்ணிக் கொண்டாள். அவளுக்கு காலம் முடிவு என்கின்ற புள்ளி தெரியாது ஓடிக் கொண்டே இருக்கின்றது என்பதாய் இருந்தது. அது பல தீர்ப்புக் கூறிவிட்டாலும் சிலமனிதர்களை மாற்றத் தவறிவிட்டதாய் இருந்தது.

ஐந்தரைக்கு வருவதாய் கூறிய நீலன் செரியாக ஆறுமணிக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினான்.
'வாங்கப்பா' என்றவண்ணம் நந்தினி கதவைத்திறந்து ஜக்கெற்றை வேண்டிக் கொழுவினாள்.
'அந்த எருமை ஒண்டு ரெலிபோன் எடுத்து அலம்பிக் கொண்டு இருக்குது. பழசை இன்னும் மறக்காமல் இப்ப நடந்த அநியாயத்தோட போட்டுக் குளப்பிக் கொண்டு நிக்கிறான்.'
'எப்ப நடந்தாலும் அநியாயம் அநியாயம்தானே அப்பா'
'இப்ப... உலகம் பார்த்துக் கொண்டு இருக்க... சரணடையச் சொல்லி போட்டு... சுட்டுக் கொண்டதுக்கும் ; அப்ப ஒரு காலத்தில எதிராளியாய் இருந்து நாட்டைக் காட்டிக் கொடுக்கப் போறாங்கள் எண்டதால சுட்டுக் கொண்டதுக்கும் முடிச்சுப் போடலாமே?' நந்தினி இதற்குப் பதில் சொல்லக்கூடாது என்றுதான் இருந்தாள். பதிலா? உறவா என்பதில் அவள் பரிதவித்தாள்.
'ம்... சொல்லு பார்ப்போம்' என்கின்ற அவனின் வற்புறுத்தல் அவளின் அந்த மௌனத்தைச் சிதறடித்தது.
'காட்டிக் கொடுத்திடுவாங்கள் எண்டு அவையச் சுட்டவை பிறகு பிரேமதாஸாவோட என்ன செய்தவை? அண்ணன்தம்பியக் கொலைசெய்யப் பார்த்துக் கொண்டு இருந்த எங்களுக்கு மாற்றான் செய்தா மட்டும்தான் ரோசம் வருகுது. எந்தக் கொலையையும் நியாயப் படுத்தேல்லாது அப்பா. கொலைகளில் இரத்தமும் வன்முறையும் தான் கூத்தாடும். அங்கு மனிதம் மரித்துப் போவதுதான் உண்மையப்பா. அதை நான் செய்தாலும் செரி. நீங்கள் செய்தாலும் செரி. வருத்தமாக் கிடந்தவையச் சுட்டு எரிக்கிறதில எந்தவித மனிதநேயம் இருக்கும் எண்டு நீங்கள் நினைக்கிறியள்? அப்ப மௌனமாய் இருந்தவைக்கு இப்பமட்டும் ஏன் அதீதமாய்க் குரல் வரோணும்? இந்த நேரத்திலயாவது நாங்களும் பிழைவிட்டம் எண்டதை ஏன் திரும்பிப் பார்க்ககூடாது? இந்த ஆர்பாட்டம்கூட எங்கட உரிமையைப் பெறுவதற்கான ஆர்பாட்டமா இருக்குதா அல்லது போராட்டத்தை வியாபாரம் செய்து வந்தவையின்ர பழிவாங்கிற கோசமா இருக்குதா? நீங்க சொல்லுங்க பாப்பம்' என்றாள்.

நீலன் இந்த விளக்கத்தை எதிர்பார்க்கவில்லை. நந்தினி இந்த விடயத்தில் தன்னை எதிர்த்துக் கதைப்பாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை. திடீர் அதிர்ச்சி மட்டுக்கு மீறிய கோபத்தை அவனுக்கு உண்டுபண்ணியது. அந்தக் கோபத்தில் வார்த்தைகள் அவன் கட்டுப்பாட்டை புறக்கணித்தன.
'ஓ நீ துரோகியின்ர தங்கச்சிதானே! இப்பிடித்தான் கதைப்பாய்' அவன் கேள்விக்குப் பதில் சொல்லாது அவளை நேரடியாகத் தாக்கினான். பின்பு தனது பிழையை எண்ணி நாக்கைக் கடித்துக் கொண்டான்.

நந்தினிக்கு உடல் எல்லாம் பற்றி எரிந்தது. கோபத்தில் கண்கள் சிவக்கக் காளியனாள். தன்னை இளந்தவளாய் ஓங்கி நீலனின் கன்னத்தில் அறைந்தாள். கையைக் காட்டி 'வெளியால போ' என உரத்த குரலில் கோபமாகக் கத்தினாள்.

நீலன் சற்று அதிர்ந்து போய்விட்டான். பின்பு அவமானப் பட்டவனாய் கோபத்தோடு வெளியேறினான்.

'ஏன்னம்மா அவசரப்பட்டனீ ' அப்பா ஆதரவாய் அவளைக் கேட்டார்.
'நான் இவ்வளவுநாளும் அவன்கருத்தும் என்கருத்தும் சில விசயத்தில ஒத்துப் போகாது எண்டு நினைச்சு இருந்தன் அப்பா. இண்டைக்கு தான் தெரிஞ்சுது, அவன் கருத்து என்கருத்திற்கு எதிர்திசையிலதான் எப்பவும் பயணிக்கும் எண்டு'

அப்பாவிடம் இருந்து வந்த ஆயிரம் வேதனைகளைத் தாங்கிக் கொள்ளும் ஒரு பெருமூச்சு நந்தினியைத் தாண்டி எங்கோ சென்று கொண்டு இருந்தது.

18 டிசம்பர், 2010

மனிதநேயச் சண்டியர்கள்

எங்கள் ஊரில் இரண்டு சண்டியர்கள் இருந்தார்கள். ஒருவன் சாவில் மற்றவன் வாழ்வு என்பதைக் கொள்கையாகக் கொண்ட இவர்கள்கூட அரசியலை மாற்றுவதற்காய் சமரசம் செய்து கொள்வார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்கின்ற விளையாட்டு, ஒரு சிறிய காலத்திற்கு மட்டும் நடக்கும். பின்பு அது தலைகீழாய் மாறும். செரி இந்தச் சண்டியரை விட்டுவிட்டு இலங்கை வரலாற்றை ஒரு முறை சிறிது திரும்பிப் பார்ப்போம்.

சுதந்திரத்தின் பின்பான இலங்கை வரலாறே மனித உரிமை மீறலோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். எழுபதுவரைக்கும் சிங்களவரால் மீறப்பட்டு வந்த இந்த அத்துமீறல்கள் பின்பு சிங்களவா், தமிழர்கள், சில சந்தர்ப்பங்களில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் ஆகிய அனைவராலும் அவ்வப்போது தாராளமாக எந்த மனச்சாட்சி இன்றி மீறப்பட்டுவந்தது. இதை எப்போதும் மூடிமறைத்து தங்களுக்கு எதிராக இருந்தவர்கள் கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுப்பதே ஒவ்வொரு இனத்தைச் சார்ந்தவர்களும் செய்துவந்த மனிதத்திற்கு இழுக்கான செயலாகும். நாங்கள் 1983 கலவரத்தை எட்டமுதலே சிங்களவர் செய்த மனித உரிமை மீறல்களைவிட, தமிழ் இளைஞர்களும், சிங்களவருக்குச் சார்பான தமிழ் அரச இயந்திரங்களும் செய்த கொடுமையான மனித உரிமை மீறல்களைப் பற்றி எல்லோரும் நன்கு அறிவோம்.

உண்மையில் சிங்கள அரசால் அவ்வப்போது மீறப்பட்டு வந்த மனித உரிமைகள் ஒரு புறம் எங்களை வாட்டியது. மறுபுறம் ஈழப்போராட்டகாலத்தில் எமது இளைஞர்களால், எமது மக்களுக்கு நித்தமும் இழைக்கப்பட்ட கொடுமைகள் சொல்லி மாளாது. பெண்பிள்ளைகளைப் பறிகொடுத்து ஒவ்வொரு முகாமாகத் தேடிப் பழிகிடந்த தாய்தந்தையரை வயது வித்தியாசம் இல்லாது பச்சை மட்டையால் அடித்த கதையை இன்றும் கேட்கலாம். அப்போதெல்லாம் அந்த மனித உரிமைகளைப் பாதுகாக்க நாட்டில் இருந்தே பலர் போராடினார்கள். குரல் கொடுத்தார்கள். அதற்காக தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். அந்த நேரங்களில் தமிழ்நாட்டில் இருந்து அல்லது புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து மாற்றுக்கருத்தாளா்கள் எனப்படுபவர்களால் மட்டுமே சிலவேளை விமா்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்காக அவர்கள் தண்டிக்கப் பட்டார்கள். சிலரின் உயிரும் பறிக்கப்பட்டது. இப்படியான நேரங்களில் தமிழ்நாட்டு அறிவுஐீவிகள் எப்போதும் மௌனம் காத்ததாகவே வரலாறு உண்டு. பெரும் தொகையான புலி ஆதரவாளர்கள் அரசை மாத்திரம் எடுத்ததிற்கெல்லாம் விமர்சனம் செய்தவர்கள், புலிகள் செய்யும் கொடுமைகள் ஒன்றையும் பேசாது மூடிமறைத்து ஆயிரம் மாயிரம் மனித உரிமை மீறலுக்குத் துணை போனதோடு, சிலதை நியாயப்படுத்தியும் இருந்தார்கள். பிழைகள் சுட்டிக் காட்டப்படவேண்டியவை. மனிதன் அனுபவத்தின் ஊடாக ஆவது திருந்திக் கொள்ள வேண்டியவன் என்பதை அவர்கள் முற்றுமாக மறுத்து நின்றார்கள்.

மாறி மாறி வந்த மனித உரிமை மீறல்களால் அநேகமான அப்பாவிகள் அல்லது அடிமட்ட உறுப்பினர்களே பலியானார்கள். எந்த மனிதவுரிமை மீறலை இயக்கங்கள் குற்ற உணர்வில்லாது நியாயப் படுத்தி பாவித்து வந்ததோ அதே மனித உரிமை மீறல் ஒருநாள் தங்கள் மீது ஒட்டுமொத்தமாய்த் திரும்பும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் நாட்டில் எதிரியை அழிக்கும் போது ஈவு இரக்கம் காட்டப்படுவதில்லை. சொந்த இனத்தை உயிரோடு யாழ்பாணத்தில் தீயிட்டபோது இந்த மனிதஉரிமைச் சண்டியர்கள் எங்கே போனார்கள். பட்டினத்தாரின் தன்வினை தன்னைச்சுடும் ஒட்டப்பம் வீட்டைச்சுடும் என்பது செரியாக இருந்திருக்கிறது. தங்களின் உயிருக்காக புலிகள் அப்பாவிகளின் உயிர்களைப் பணயம் வைத்தபோது இந்த மனிதநேயச் சிங்கங்கள் எல்லாம் எங்கே பதுங்கி இருந்தன? எப்போது ஒருமனிதன் பக்கச்சார்பாகக் கதைக்கிறானோ அப்போது அவன் கதைப்பதில் நியாயமும் இருக்கப் போவதில்லை. அவனது ஆத்மாவும் அப்போது மரணித்து இருக்கும்.

அரசு மனித உரிமை மீறலில் எப்போதும் ஈடுபட்டு வந்திருந்தாலும் அரசோடு கூட்டு வைத்து, சமரசம் பேசி, பணம் வேண்டி, மாற்று இயக்கத்தை வேட்டையாடி, யுத்தம் தொடங்கி, போர்நிறுத்தம் செய்த போதெல்லாம் மனித உரிமை மீறல்களைவிட, இராஐாதந்திரம் துருத்திக் கொண்டு நின்றது என்கிறார்கள். இன்று அந்த இராஐதந்திரம் தோற்று புலிகள் இல்லாது அழிக்கப்பட்டதால் ஒரு சிறு மகாநாடு வைப்பதுகூட மனிதவுரிமை மீறியவர்களை ஆதரிப்பதாக இருக்கிறது. இங்கேயும் தனிமனிதர்களின் அரசியலுக்காக மட்டுமே மனித உரிமை பற்றிப் பேசப்படுகிறது. உண்மைக் காரணத்தைவிட ஓழிந்து நிற்கும் காரணம் ஆயிரம்.

இங்கு தங்களை மனிதநேயப் பாதுகாவலர் என்பவா்கள் கண்களில் எப்போதும் அரசு செய்வதே கண்களில் படுகிறது என்பதும் ஒருகாலத்தில் இவர்கள் புலிகள் எதைச் செய்தாலும் அவர்களுக்கு ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தவர்கள் என்பதும் நிதர்சனம். இப்போது எல்லாம் அழிந்த பின்னும் அதே மனப்பாண்மையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை. எமது நோக்கம் யாரது மனித உரிமை மீறலையும் ஆதரிப்பது அல்ல. யார் குற்றம் செய்தாலும் அது குற்றமே என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாது கூத்தாடுவது தமிழ் அரசியலின் சாபமாய் இருக்க வேண்டும்.

எங்கள் ஊரில் இரண்டு சண்டியர்கள் இருந்தார்கள். ஒருவன் கொல்லப்பட்டு விட்டான். மற்றவன் உயிரோடு இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் உயிரோடு இருக்கும் சண்டியனோடு கதைக்ககூடாது என்று அயலுார்காறன் சொல்லலாம். அவர்கள் திண்ணையில் சுதந்திரமாய்க் காலை ஆட்டிக் கொண்டு இருக்கலாம். நான் அப்படி இருக்க முடியவில்லை. என்னிலமை அப்படி இன்றில்லை. என்றும் இருந்ததில்லை. இன்னும் உயிரோடு இருக்கும் சண்டியன்தான் எங்கள் ஊர் விதானையாக இருக்கிறான். காலையாட்டிக் கொண்டு இருக்கும் அயலுார்காறன் சொல்வதைக் கேட்பதா, நாளும் வதைப்படும் நான் முடிவெடுப்பதா. நீ சண்டியன்கீழ் வாழுபவன் உனக்கு முடிவெடுக்கும் உரிமை இல்லை என்கிறார்கள் அயலுார்காறர்கள். சண்டியன் நல்லவனா அல்லது அயலுார்காறன் நல்லவனா? இரண்டு பகுதியும் என்னுரிமையில் விளையாடுகிறார்கள் என்பது புரிகிறது. அதுவும் எனக்கு நியாயம் வேண்டித் தருவதாகக்கூறி எனது உரிமையை மறுக்கும் இவர்களிடம் நான் கையேந்த வேண்டி உள்ளது. வெளியூரில் இருந்து வீரம் பேசுபவர்களுக்கு ஒன்று புரியவில்லை. அவர்களின் வீரப்பேச்சினால் எங்களுக்கு இங்கு பாராட்டுக் கிடைப்பதில்லை. இருந்த கூப்பனையும் எங்கள் விதானை பறித்துக் கொண்டுவிட்டார் என்பதைச் சற்று புரிந்து கொள்வீர்களா?

15 டிசம்பர், 2010

இனி மெல்லச் சாகும் தமிழ்

'இனி மெல்லத் துளிர்க்கும் தமிழ்' என்பது முகப்புத்தகத்தில் அதிகம் பாவிக்கப்படும் ஒரு மேற்கோள். நான் ஏதிர்வினையாக எண்ணுவதாய் நீங்கள் சிந்திக்க வேண்டாம். என்மனதிற்குள்ளும் 'இனி மெல்லத் துளிர்க்கும் தமிழ்' என்றே ஆகவேண்டும் என்பதே அடங்காத ஆதங்கமாக இருக்கிறது. ஆதங்கங்களோ, கற்பனைகளோ, வீரவசனங்களோ, யதார்த்தங்கள் ஆவதில்லை. ஈழத்தமிழராகிய நாங்கள் மோட்டுச் சிங்களவரென அறியாமையில் வீரம் பேசிநின்றோம். அவர்கள் எங்களை அரசியலில், இராணுவத்தில் படுகிடையாக்கியபோது வாயடைத்து நிற்கிறோம். நடைமுறை யில்லாத கற்பனா வாதங்களால் எங்களுக்கு நாங்களே தாராளமாகக் குழிவெட்டிக் கொள்ளமுடியும். அதைவிட உருப்படியாக எதையும் செய்ததாக இல்லை என்பது நிதர்சனம். பிரச்சனை இருக்கிறது என்கின்ற போதுதான் அதற்கு மருந்து கொடுக்க முயற்சிக்கலாம். வருத்தத்தை வைத்துக் கொண்டு எனக்கு வருத்தமே இல்லை என்றால் மருந்து கொடுக்க முடியாது. மரணம்தான் அவனை அரவணைக்க முடியும். 'இனி மெல்லத் துளிர்க்கும் தமிழ்' என்பது மருந்து வேண்டாம் என்று அடம்பிடிப்பது போல் இருக்கிறது.

தமிழின் பிறப்பிடமான தாய்த் தமிழ் நாட்டில் நான் வாழ்ந்தபோது முத்திரை அரிசி என்பனவற்றை தமிழில் கூறி, அவமானப்பட்ட அனுபவங்கள் உண்டு. 'றைஸ் என்று தமிழில் சொல்லையா' என்கின்ற போது வேட்டி உரிந்த வெக்ககேடாய் இருந்தது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த எம்மினம் அவர்களை மேன்மையானவர்களென எண்ணி, அவர்கள் கூறுவது எல்லாம் செரி, செய்வது எல்லாம் செரி என்கின்ற அடிமை மனப்பாண்மையில் அழுந்திக் கிடக்கின்றனர். அதுவே ஆங்கிலத்திற்கு நாங்கள் அடிமையாவதை ஊக்கிவித்தது.

ஆங்கிலம் ஒரு மொழி. அது இரண்டாவது மொழியாக எமக்குத் தேவைப்படுகிறது. அது சிலவேளைகளில் மற்றைய மனிதர்களோடு தொடர்பு கொள்வதற்கோ, அல்லது எமது மொழியில் இல்லாத அறிவு நூல்களை வாசிப்பதற்கோ உதவி செய்கிறது. ஆங்கிலத்தை நோர்வேயிலும் படிக்கிறார்கள். அழகாகப் பிரித்தானிய ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம் எனத் தெளிவாகப் பிரித்து, ஆழமாகக் கற்கிறார்கள். அதைத் தேவையானபோது பயன் படுத்துகிறார்கள். அதற்காக அதில் மோகம் கொண்டு, தங்கள் சொந்த மொழியைத் தொலைக்கும் அறிவீனம் அவர்களுக்கு இல்லை. சில பயன்பாட்டிற்கான மொழி வேறு, தாய் மொழி வேறு என்பதில் அவர்கள் நன்கு தெளிவாக இருக்கிறார்கள். வீட்டில் ஆங்கிலம் பேசுவதால் சமூக அந்தஸ்து கிடைக்கும் என்கின்ற போலிக் கௌரவத்தில் அவர்கள் வாழ்வதில்லை.

தமிழரின் அடிமைவிசுவாசம் ஆங்கிலத்தின்மீது அதீதமாய் இருக்கிறது. பயன் பாட்டிற்கு மாத்திரம் பாவிக்க வேண்டிய மொழியை, அடிமை மோகத்தால் தாய்மொழியாக்கும் அவலம் அரங்கேறுகிறது. ஒருவன் தமிழ்நாட்டில் இருந்தாலும், வீட்டிலே அனைவரும் ஆங்கிலத்தில் கதைத்தும், எழுதியும் வந்தால் அவர்கள் தாய்மொழி எது? அல்லது ஒரு பிள்ளை ஆங்கில மொழியில் மாத்திரம் பாடங்களைத் தனது பாடசாலையில் பயின்று வந்தால் அவனது எண்ண உருவாக்கம், எழுத்து உருவாக்கம் எந்த மொழியில் வரும்? அவனுக்கு பின்வரும் சந்ததிகள் எந்த மொழியில் அதைச் சிந்திப்பார்கள்? இன்றைய தமிழ்நாட்டில்
பெருமளவில் ஆங்கிலத்தில் எழுதி, ஆங்கிலத்தில் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு பயன்பாட்டு மொழியாக வைத்திருக்க வேண்டியதைத் தாய் மொழியாக்கி, தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறார்கள். இங்கே நோர்வே மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால், எந்த மொழிக்கு எந்த இடம் கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற தெளிவு நோர்வே மக்களிடம் இருக்கிறது. தமிழர்களிடம் அது பொதுவாக இல்லை. நாலுமில்லியன் மக்கள் பேசும் நோர்வே மொழி வாழ்வதற்கு தமிழைவிட நிறையவே சந்தர்ப்பம் உண்டு. ஒன்று மக்களிடம் இருக்கும் மொழிபற்றிய தெளிவு. இரண்டு அந்த மொழிக்கான ஒரு நாடு. இவை இரண்டும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. எழுபது மில்லியன் மக்கள் பேசும் தமிழ் அழிந்து போகலாம். அதற்கென்று ஒரு நாடும் இல்லை. அவர்களிடம் மொழியின் பயன்பாடு பற்றிய தெளிவும் இல்லை. இந்த இரண்டுமே இல்லாது, தமிழில்படிப்பதே அவமானம் என்கின்ற தமிழ்நாட்டில், தமிழ் இப்போதே திரிந்து தங்கிலீசாய் மாறிவிட்ட ஒரு நாட்டில், இந்தியிலும் ஆங்கிலத்திலும் மோகம் கொண்டுவிட்ட ஒரு நிலையில், அங்கு மகாநாடுகளில் மட்டும் சிலகாலம் தமிழ் வாழலாம். இன்னும் ஒரு இருபது வருடங்களில் தமிழ்நாட்டில் தமிழைவிட ஆங்கிலத்தில் அதிக புத்தகங்கள் வெளி வரலாம். தனக்கு மிகவும் பரீட்சயமான மொழியில்தானே மனிதனால் சிந்திக்கவும் எழுதவும் முடியும்?

இலங்கையில் சிறுபாண்மை மொழியான தமிழ் சிங்கள மயமாக்கப்படுவதோடு, தமிழர்களின் பொருளாதார நாடோடி மனப்பாண்மையால் வேற்று நாடு சென்று அவர்கள் குடியேறுதல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அத்தோடு இலங்கையின்
இன முரண்பாடு தொடர்ந்து கொண்டு இருப்பதால் தமிழன் இருப்பை அது அங்கு கேள்விக் குறியாக்குவதோடு, இருப்பவர்களும் சிங்களமயமாதலை தடுக்க முடியாது போய்விடப் போகிறது. 'மைக்ரோ' சிறுபாண்மையாக இருந்து கொண்டு தமது மொழியைத் தக்கவைத்துக் கொள்வது ஒன்றும் நடமுறைச் சாத்தியம் அல்லாது போகும். இனிச் சிங்களம் படித்தால்தான் வாழ்வு உண்டு என்கின்ற இயலாமைக்கு அங்கே அடக்குமுறைகள் வழிகோலிக் கொண்டு இருக்கிறது. தமிழில் படிப்பதோ கதைப்பதோ அவர்கள் நடமுறை வாழ்க்கையில் சிக்கல்களை உண்டுபண்ணிக் கொண்டே இருக்கிறது.

புலம் பெயர்ந்தவர்கள் எப்போதும் தங்கள் மொழியை இழப்பது மாற்ற முடியாத நியதியாகும். வந்தேறு குடிகளின் முதலாவது பரம்பரை போற்றும் மொழி இரண்டாவது அல்லது மூன்றாவது பரம்பரையில் முற்றும் மறக்கப்பட்டு விடும். இன்று நோர்வேயில் வாழும் பிள்ளைக்கு நோர்வேமொழிதான் தாய் மொழியே தவிரத் தமிழ் மொழி இல்லை. தமிழ் பேசி அவர்கள் விளங்கிக் கொண்டாலும் பதில் மட்டும் நோர்வே மொழியில் வருகிறது. இவர்களின் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இனியாவது தழிழைக் காப்பாற்ற வேண்டும் என்றால், ஆங்கில மொழியின் பயன்பாடு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்கின்ற தெளிவான அறிவை மக்களுக்கு ஊட்டி, 'இனி மெல்லத் துளிர்க்கும்' என்கின்ற கனவை நிறுத்தி, 'இனி மெல்லச் சாகும் தமிழ்' என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கு எதிராக என்ன செய்ய முடியும் என்பதைப் சிந்திக்க வேண்டும்.

7 டிசம்பர், 2010

மனிதனின் மறுபக்கம்

ஊனும் எலும்பும் உள்ளிருக்கும் நரம்பும்
நாறிப் போய்விடும் நாம்மூச்சு நிண்டிடவே
ஆணவத்தில் ஆடுவார் அதர்மத்தோடு வதைப்பார்
வாழையடி வாழையாய் வாழ்ந்திருக்கும் கனவுடன்

யாதுமே பொய்யென நாழியில் மாறிடும்
மெய்யினை உணர்ந்தவன் ஞானியாய் பிரசவிக்க
அறிவிலி ஆடுவான் அடங்காது திமிறுவான்
முடிவிலே யாதுமே பூச்சியம் ஆகுவான்

மனிதரை வதைக்கின்ற மனிதனும் மனிதனா
புனிதங்கள் செய்தாலும் மனிதத்தின் முகவரா
மனதிலே விலங்காக நோய்களில் அழுந்துவர்
மனிதனை வதைப்பதில் மகிழ்வினைக் கொள்ளுவார்

அழகு பொயுரைத்து கருத்தினை மாற்றுவர்
ஆயினும் குரூரங்கள் மரித்தாலும் பேசுமே
மகான்களைப் படிக்கிறார் மனிதத்தை இழக்கிறார்
மனிதனின் மறுபக்கம் விலங்கென காட்டுறார்

காதல்

கண்ணும் கண்ணும் கலக்கும்
காதலாய் அது சுரக்கும்
பெண்ணைப் போகமாய் எண்ணிய
பேதமை தொலைந்து போகும்
எண்ணும் போதெல்லாம் இனிக்கும்
என்னவள் நினைவே நிறையும்
சொல்லில் செந்தமிழ் நடனம்
சொற்கியே நானும் இரசிப்பேன்
கண்களில் வீசும் ஓளியும்
தேனிதழ் சிந்தும் சுவையும்
எந்தனை மயக்கும் கள்ளோ
இவளென் பேரின்ப மாதோ
காதலே உயிரின் உயிரோ
காணாதார் வெறும் ஐடமோ
உயிரே உருகும் அவளால்
உலகம் மறக்கும் நிதமும்
வாழ்விலே சிலருக்கே வரும்தவம்
வாய்த்தால் உலகின்பம் நிறைவுறும்
ஏறினோம் இறங்கினோம் என்றவாழ்கை
ஏனிந்த அவலம் என்றகணங்கள்
வீணர்கள் பேச்செல்லோ காதலென்று
வினாவியகாலங்கள் நினைவில் உண்டு
நானதன் வயப்படல் ஆனபோது
என்னை நான்மறுக்கும் என்னைக்கண்டேன்
தோழனே சொல்லடா காதலென்ன
தோன்றிவிடும் மாய வித்தையென்ன
டார்வினின் கோள்பாடு பின்புலத்தில்
ஞானத்தையே உண்டுபண்ணும் செயற்பாடா?
தேடுகின்றேன் விடையொன்று இதற்கின்று
தெரிவதெல்லாம் அவள்முகமே எங்கெங்கும்.

மௌனம்

சொற்கள் கொட்டிவிடும் என்று மௌனமா
சொற்களே இல்லை என்பதால் மெளனமா
மற்றவர்களைப் படிப்பதற்காய் மெளனமா
மற்றவர்களைப் படித்ததால் மெளனமா
பேசுவதைக் கேட்பதற்காய் மௌனமா
பேசவே கூடாதென்பதற்காய் மௌனமா
சாந்தி பெறுவதற்கான மௌனமா
சாந்தி பெற்றதால் மௌனமா
புலன்களை அடக்கும் மௌனமா
புலன்கள் அடங்கியதால் மௌனமா
வாழவே புரிந்ததால் மௌனமா
வாழவே புரியவேண்டுமென்கின்ற மௌனமா
கற்றதால் வந்த மௌனமா
கற்கவேண்டும் என்பதால் மௌனமா
மனச்சாட்சியில் பிறக்கும் மௌனமா
மனச்சாட்சியே நீ மௌனமா
மௌனமே நீ கனகமா
உன்னணைப்பில் உரிமையும் தொலையுமா?

இசங்கள்

எத்தனையோ இசங்கள் ஐயா உலகிலே
அத்தனையும் சவங்கள் ஐயா நடப்பிலே
சித்திரமாய் வசனங்கள் அங்கே சிலேகிக்கும்
சீள்வடியும் தனிமனித அராஐகமே ஒழிந்திருக்கும்
இத்தனையும் பல முகங்கள் கொண்டிருக்கும்
எத்தனையோ குறுக்கெழுத்தாய் திரிந்து வரும்
நடமுறையில் வென்ற இசம் ஏதுமுண்டோ
நானதற்குத் தாழ்பணிய சித்தம் கொண்டேன்.

பிழை யென்பதோ சரியென்பதோ

வார்த்தைகள் வற்றி என் வாய்
மூடியிருக்க வில்லை
கொட்டப்போகும் சொற்களுக்கு
வரைபிலக்கணம் தேடுவதில்
கொஞ்சம் மறந்து போய்விட்டேன்.

சொற்களால் கருவுறும் உன் ஓவியத்தை
ஆயிரம் கோணத்தில் அவரவர் நோக்குவார்.
உன்கோணங்கள் அழிந்து
அவர் கோணல்களில்
நீ குற்றவாளியாவாய்...

மௌனங்கள் என்னும் வெற்றுத்தாளில்
ஓவியங்கள் இல்லை
கோணல்கள் இல்லை
விமர்சனமும் இல்லை

நிறங்கொண்ட ஓவியங்கள்
பிறக்கும் போது
பல மனங்கொண்ட
மனிதர்களை அதை நோக்க
அவர் குணங்கொண்ட வடிவில்
கோணங்கள் உருவாகி
உனைவந்து சேரும்
குறை சொல்லும்
நிறை சொல்லும்

இனம் கண்டுகொள்
பிழை யென்பதோ
சரியென்பதோ
நிலையற்ற ஒன்று.